Leadership Training Hyderabad

03 Feb 2020 Admin

ஹைதராபாத் லீடர்ஷிப் டிரெயினிங்கில் கலந்துக் கொண்டு எனது கருத்துக்களாக அங்கு பதிவு செய்ததை சுறுக்கமாக கூறுகிறேன்...


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்.எல்.ஏ, மாநகராட்சி தலைவர்(மேயர்), மாநகராட்சி உறுப்பினர், நகரமன்ற தலைவர், நகரமன்ற உறுப்பினர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி கவுன்சிலர், ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட குழு தலைவர், மாவட்ட குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என்று பல பதவிகள் இருந்தாலும், எந்தெந்த பணிகளை யாரார் செய்ய முடியும் என்பதற்கு அளவுகோல் உள்ளது.

ஒரு கிராமத்தில் குடிநீர் பைப் வேலை செய்யவில்லை என்றால் அதை சரி செய்வது ஒரு ஊராட்சி மன்ற தலைவரின் பணி. அதற்கான நிதி அந்த ஊராட்சிக்கு அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியை ஒரு எம்.எல்.ஏ செய்யமுடியாது, ஒரு ஊரில் ஏதோ ஒரு பள்ளிக்கு கட்டிடம் கட்ட வேண்டுமா அல்லது சுற்று சுவர் கட்ட வேண்டுமானால் அதை எம்.எல்.ஏ அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்ட முடியும்.

ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் செய்ய வேண்டிய பணியை எம்.எல்.ஏ செய்ய வேண்டும் என்றும், எம்.எல்.ஏ செய்யக்கூடிய பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் செய்ய வேண்டும் என்றோ மக்கள் நினைப்பார்கள். ஏனெனில் மக்கள் பிரதிநிதிகள் எந்த பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து மக்கள் அறிந்திருப்பதில்லை. இதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அனைவரின் கடமையாகும்.

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் கடமை தொகுதி மக்களின் பிரச்சனைகளை அவர்களின் பிரதிநிதியாக சட்டசபையில் எடுத்துரைப்பதும், தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து அன்றைய சமூக சூழலையொட்டி சட்டசபையில் பேசி அதனை தொகுதிக்கு கொண்டு வரச் செய்வதுமே. இதில் எல்லா எம்.எல்.ஏ-க்களும் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி-25 அன்று வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுவது போல ஒவ்வோராண்டும் ஏதாவது ஒரு தினத்தை மக்கள் பிரதிநிதிகள் தினம் என்று அறிவித்து அந்நாளில் பொதுமக்களுக்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பையும், அவர்களால் செய்ய இயலும் பணிகள் குறித்தும் விழிப்புணர்வு கொடுப்பதின் மூலம் தமிழக மக்கள் அரசியில் விழிப்புணர்வு அடைவார்கள்.

இந்தியாவில் தற்கால இளைஞர்களின் ஆற்றல் வீணாக்கப்படுவதாக உலக அரங்கில் பேசப்பட்டு வரும் நிலையில் வருங்காலத்தில் மக்கள் பிரதிநிதிகளாக 60 சதவீதம் பேராவது இளைஞர்களாக இருக்க வேண்டும். அதற்கு அந்த இளைஞர்களை வழிகாட்டும் சரியான தலைவர்கள் தேவை. இந்நாட்டினில் அத்தகைய தலைவர்கள் குறைந்த அளவே இருப்பதால் இளைஞர்களை முறைப்படுத்துவது கடினமாக உள்ளது.

எனவே இளைஞர்களுக்கு இது போன்ற பயிற்சியை அளித்து அவர்களும் சிறந்த தலைவர்களாக உருவாக்க வேண்டியது மக்கள் நலம் விரும்பும் பொது நல அமைப்புகளின் பொறுப்பாகும்.

மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க அவர் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்க ஒருவர் ஐ.பி.எஸ் படிக்க வேண்டும், மருத்துவராக எம்.பி.பி.எஸ், ஆசிரியராக பி.எட் என்று ஒவ்வொரு படிக்கும் ஒரு படிப்பு அளவுகோலாக இருக்கும் போது மக்கள் பிரதிநிதியாக ஒருவரை தேர்ந்தெடுக்க மட்டும் எந்த கல்வி தகுதியும் அளவுகோலாக இருப்பதில்லை.

எனவே மக்கள் பிரதிநிதிகளாக ஏதோ ஒரு பதவிக்கு போட்டியிட குறிப்பிட்ட கல்வி தகுதி என்று வரையறுக்க வேண்டும், உதாரணமாக ஒருவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டால் அதற்கு தகுந்த ஒரு கல்வி தகுதி, எம்.எல்.ஏ-க்கு போட்டியிட்டால் அதற்கு தகுந்த ஒரு கல்வி தகுதி, அந்த எம்.எல்.ஏ சார்ந்த கட்சி ஆட்சி அமைக்கும் போது அமைச்சர் பதவிக்கு வருபவருக்கென்று ஒரு கல்வி தகுதி வரையறுக்க வேண்டும். இப்படி செய்வதால் பொறுப்புகளுக்கு வருபவர்கள் அந்த பொறுப்பை சிறப்பாக வகிக்க முடியும்.

காமராஜர், கக்கன் எல்லாம் படித்தா பெரிய பதவிக்கு வந்துவிட்டார்கள் என கூறலாம். ஆனால் எல்லோரும் காமராஜர், கக்கன் ஆகிவிட முடியாது. அக்கால சூழலும், தற்கால சூழலும் வேறு வேறு. அக்காலத்தில் சமூகத்தில் இருந்த கல்வி அறிவும், வாய்ப்புகளும், தற்காலத்தில் உள்ள கல்வி அறிவும் வாய்ப்புகளும் வேறு வேறு. எனவே கல்வி தகுதியையும் மக்கள் பிரதிநிதிகளுக்கென வரையறுக்க வேண்டும்.

இந்தியா இளைஞர்களின் கையில். அத்தகைய இளைஞர்களுக்கு வழிகாட்டிட மூத்தவர்கள் தக்க ஆலோசனைகள் அவ்வப்போது இது போன்ற பயிறிசிகள் மூலம் அளிப்பதால் வளமான இந்தியா உருவாகும்.

Leadership Training - Hyderabad Leadership Training - Hyderabad Leadership Training - Hyderabad Leadership Training - Hyderabad Leadership Training - Hyderabad Leadership Training - Hyderabad